Wednesday, 30 April 2014

பிரசவம்

ஐயிரண்டு திங்களாய்
அடி வயிற்றில் உயிர் சுமந்து
அணு அணுவாய் இரசித்திருந்து
உயிரிறக்கும் நேரத்தில்
உனதருகே நானிருக்க
உன்கை எனை பிடித்திருக்க
என் கண்ணின் துளி முத்துக்கள்
உன் கைகள் துடைத்தெடுக்க
உன் முத்தங்களை என் நெற்றியில்
பரப்ப, பயந்தேவிட்டேன் நான் ,
உன் முத்தச்சூட்டில் தெரிந்த பதட்டத்தில்
மறுஜென்மம் உனக்கா எனக்கா ????

உன் தவிப்பை நான்கண்டு
என் வலியை அடக்க
வீறிட்ட ஒரு சப்தம் .......
சப்தமிட்டது நானா?
இல்லை உனதுயிரா?

குழப்பங்கள் நீள
கலைத்தது நம் உயிரின்
அழுகை.

உதட்டில் புன்னகையுடன்
செவிலித்தாய் நம் சிசு நீட்ட
கண்களிள் கண்ணீருடன்
நீ பற்றுகின்றாய்
செல்லமாக திட்டுகின்றாய்
"ஏன் உன் அம்மாவை
இப்படி படுத்தினாய் ??"

அழகாக சிரிக்கிறது
"உன் காதலை சோதிக்கத்தான் "
என்பதுபோல .

இதுதான் அர்த்தம் என்று
உனக்கும் புரிந்தது

பெற்ற சோர்வில்
துவண்டிருந்தேன் நான்
ஒரு கையில் குழந்தையுடன்
ஒரு கையில் என்னை வருடுகிறாய்
"அம்மா பாரு " என்கிறாய்

உன் ஸ்பரிசச்சூடு பட்டு
கண் விழித்தேன் நான்
காதலின் சாட்சியை
கையில் வைத்திருந்தாய் நீ ,
உன் கண்கள் நிறைந்திருந்தது
உன் கண்களின் அந்த நிறைவை
இதுவரை கண்டதில்லை நான்
உன் கண்களால் என்னை ஊடுருவினாய்
என் கண்களால் அதை உள்வாங்கினேன்
சிசு சிணுங்கியது
அதற்கான உயிர் திரவத்தை
நான் அளிக்க தயாராக
செல்லமாக சிரித்திட்டு
வெளியேறினாய் நீ

No comments:

Post a Comment