இந்நேரம் நீயும்
அந்த நிலவை பார்த்துக்கொண்டிருப்பாய்.....
00
என்னைப்போலவே
கையில் தேநீர் கோப்பையுடன்
00
நானுனக்கு பரிசளித்த
தேநீர்க்கோப்பையாய் இருக்க
அதிகபச்ச வாய்ப்பிருக்கிறது
00
அனேகமாக என்னை நினைத்து
சிரித்துக்கொண்டிருக்கக்கூடும்
00
உன்னை சுற்றி அனைத்தும்
என்னை ஞாபகப்படுத்தும் போது
உன்னால் என்ன செய்ய முடியும் பாவம்
00
நான் உன்னிடம் விட்டுச்சென்ற
என் உதடிற்கு நீ தேநீர்
ஒத்தடம் தருவதை என்னால்
உணர முடிகிறது
00
நீ ஒவ்வொரு முறை
அருந்தும்போதும் ஒரு
நட்சத்திரம் இங்கே பூக்கிறது
00
அதை எண்ணிக்கொண்டே
என் தேநீரை எடுக்கையில் அதில்
ஒரு மழை துளி
விழுகிறது
00
என் இல்லாமையில் என்
இருப்பை உணர்ந்து நீ
சிந்தும் கண்ணீர் என்றுணர்ந்து
அதில் வேறொரு மழை நீர்
விழாமல் பத்திரமாய்
உள்ளெடுத்து வந்து
பருகுகிறேன் ......
00
நீயும் அதையே தான் செய்கிறாய்.....
00
அன்று முதல் நாம்
மழைத்தேநீர் பிரியர்கள் ஆனோம்...